Saturday, 27 May 2017

தனிமை...

கசியும் குளிரின் நடுவில்
ஒரு கனத்த போர்வைக்குள் நடுங்கிக் கிடக்கிறது
தனிமை...
இருப்பின் நிதர்சனம் விரிந்த போது
ஓற்றை நிலா உன்னை தனித்துக் கடந்தது யாமினி!!
தனிமையின் வாசனை வடிந்த
விடியலின் பனித்துளிகளில் நுகர்ந்து கடக்கும்
ஒரு வழிப்போக்கனின் கைகளில்
விளக்காகிறேன் நான்...

Monday, 22 May 2017

பெரும் சாபத்தின் நீட்சி...

நிஷ்டை களைந்த இரவின் ஓரத்தில்
வெறுமையாய் கரைகிறது ஞானம்!!!
“ஆழ்ந்து படர்ந்த பேரமைதி...
ஆசைகள் கடந்த மோட்சம்...
பெருநெறி செலுத்திய பாதம்...
ஞானம் தெளிந்த மௌனம்...
மருள் அகன்ற பாதை...
நேசத்தில் குழைந்த வார்த்தைகள்...
அன்பின் சூட்சுமம்...”
இப்படி ஓரு மழை இரவில்
ஒரு நிஷ்டைக்குள் வாசியடைந்தது
அந்த உன்னத ஆன்மா!!!
"குருதியில் நீர்த்த தாகம்..
வார்த்தைகள் சுமக்கும் வக்கிரம்..
மலம் சுமக்கும் இதயங்கள்..
இருள்படிந்த கண்கள்..
மமதை செறிந்த ஞானம்...
பேரிரைச்சல் நிறைந்த அசுவத்தம்..
குரோதங்களின் சூட்சுமம்...
அத்தியயனங்கள் மறந்த உதடுகள்.."
இப்படி, இன்னொரு இரவில்
"துறவை" போர்த்திக் கொண்டது பேரவம்...
அசப்பியம் ஓதும் 
அக்கனின் ஓலத்தில்
நிஷ்டை களைந்து விழித்துக் கொண்டது
இந்த இரவு...
அமைதி கரைந்த உன்னத இரவில்
கசிந்துக் கொண்டிருக்கிறது
பெரும் சாபத்தின் நீட்சி...


Saturday, 13 May 2017

இன்னும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

வெறுமையின் ஆழத்துள்
உடைந்து நொருங்கிய கண்ணாடி
பெரும் மௌனத்தின்
விம்பத்தை யாரிடம் காட்டும்....
காதலின் மெல்லிய ஆசுவாசம்,
தூரலைபோல சிதறும் உன் முத்தங்கள்,
வர்ணம் கலைந்த ஒரு கனா...
தூக்கம் துறந்த தனித்த காத்திருப்பு...
எழுத மறந்த நாட்குறிப்பின் பக்கங்கள்...
விரகம் நீர்த்த மெல்லிய அனைப்பு...
உருகி வழிந்து ஆடிக்களிக்கும் ஒரு மெழுகுவர்த்தி..
கசிந்து வழியும் மரணத்தின் நெடி...
மனதை நெருடும் எழுதப்படாத கவிதைகள்..
தூரத்தில் கேட்கும் உன் மெல்லிய விசும்பல்...
எல்லாம் மறையும் இந்த
யாமத்தில் வழியும் ஆகிரியில்
இன்னும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...!!!

இரவின் வாசனை

அதிகம் வெறுக்கும் ஒன்றைப்பற்றி
அதிகமதிகம் பேசித்தீர்க்கிறது இந்த காற்று...
மாயானங்களின் வாசனை சுமந்தபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலை போல இந்த மனது
ஒரு அந்தி முடியும் வரை காத்திருக்கிறது
இருளுக்குள் மூழ்கிவிட்ட ஒரு கடல்
என் அறைக்குள்ளே இரைந்துக்கிடப்பதையும்
அது ஒரு காந்தாரியை இசைத்து வழிவதையும்
பின்னொரு கனவில் நான் கண்டு விழித்தேன்...
“அந்த இருளும் ஒரு மௌனத்துள் மூழ்கிக் கிடந்தது...”
காற்றின் விளரி படிந்த
மீதமிருக்கும் ஒரு பாடலைக் அருந்தி
ஒரு இரவை கடந்துவிட முடியுமா...??
இரவின் வாசனையில்
விரகம் தீர்க்கும் ஒரு பாடல் அது...

Friday, 5 May 2017

ஒரு நேசம் மட்டுமே அந்த உலகின் விலாசம்

அந்த ஒற்றைக் கவிதையின்
வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து
மெல்ல உருவங்களாய் சிதறி
காதலின் உலகை வரைகின்றன...
உணர்வுகள் நீர்த்த மனங்கள்
கருப்பு வெள்ளையாய்
அந்த உலகை கண்டதாயும்
தூரத்தில் உதிர்ந்து விழும்
நட்சத்திரம் என்பதாயும்
பதிந்துக் கொள்கின்றன....
ஒரு நேசம் மட்டுமே
அந்த உலகின் விலாசம்

Wednesday, 3 May 2017

“காதல் என்பது எது”

“ஆன்மா என்பது எது’’ எனக் கேட்கிறாய்...
“பெரும் காதலின் பெருவெளியில் தனித்து நிறைந்து
பரந்துக் கிடக்கும் இரகசியத்தின் பிம்பம்” என்கிறேன்...
“காதல் என்பது எது” என்கிறாய்...
அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும்
மூலத்தின் யதார்த்தம்” என்கிறேன்...
“வாழ்க்கை என்பது எது” என்று கேட்கிறாய்...
ஸ்தூலத்தின் பிரிவோன்றிலும் ஆன்மாவில் புன்னகை தரும்
பெரும் காதலின் நினைவுக் குறிப்புக்கள்” என்கிறேன்
‘‘மரணம் என்பது எது’’ என்கிறாய்...
“வாழ்ந்து முடித்த ஆன்மாக்களின் கொண்டாட்டம்” என்கிறேன்..