Monday, 15 February 2016

ஒற்றைப் பனித்துளி!

தனிமையில் வழிகிறது
கண்ணீராய்
இந்த ஒற்றைப் பனித்துளி.....

வெறுமையும், தனிமையும் 
சூழ்ந்த இந்த பாலையில்
ஒரு ரோஜாவுக்காய் தவம் கிடக்கிறது
இந்த ஒற்றைப் பனித்துளி....

ஒரு புன்னகையால்
கடந்து போன போதும்....
அந்த நெடுஞ்சாலை எங்கும்
ஒற்றைப் பனித்துளி
என்னில் வழிந்துகொண்டே இருந்தது....

மிஸ்பாஹுல்ஹக்.

புகைப்படம்: Rashidh Crazz
(இவரின் புகைப்படங்கள் அழகான கவிதைகள் )


Thursday, 4 February 2016

இந்த நேசம்



பிரிவில் இருந்து
ஆரம்பித்தது,
இந்த நேசம்...

உன்னை அறிந்துக்கொள் 
என்கிறாய்...
பின் என்னை
நெருங்கு என்கிறாய்...

தீரா உன் காதலில்
என்னை அழித்துக் கொள்கிறேன்...
இல்லாமையில் இருந்து
என் இருப்பிற்கு என்னை
மீட்டுச்செல்கிறேன்....

மீண்டும் ஒரு பிரிவில்
சேர்கிறது நம் காதல்...

மிஸ்பாஹுல்ஹக்.

Wednesday, 3 February 2016

தோழி



என் அழகான சண்டைக்காரி நீ...
உன் ஆழமான அன்பில் 
குழந்தையாகிப் போகிறது என் உணர்வுகள்.....

நம் பார்வைகளால்
பகிர்ந்தது கொள்ளும் ஒரு புன்னகை
ஆயிரம் வார்த்தைகளை சேமித்து விடுகிறது...
முழு இரவில் “ஷெனாய்” தரும்
மயக்கத்தின் சுவையை
நொடியில் கடக்க விடுகிறது அது...

என் அழகான சண்டைக்காரி நீ...
உன்னிடம் மட்டும் தோற்று விடுகிறது
என் செருக்கு...

உன் நாட்களை நீ விவரித்துக் கொண்டிருக்கிறாய்
உன் உணர்வுகளில் நான் பயணிக்கிறேன்...
என் வலிகளில் நீ அழுகிறாய்...
உன் தனிமையில் நான்
உன் மௌனமாய் இருக்கிறேன்...

தனியான நமக்கான கனவுகளை
இருவரும் சேர்ந்தே வளர்க்கிறோம்...
தனியான நமக்கான பாதைகளில்
இருவரும் கைகள் கோர்க்கிறோம்...
இறுகப் பற்றிய நம் விரல்கள் இடைவெளிகளை
விரும்பாமல் பயணிக்கும்...
நமக்கான காயங்களை நமக்குள்ளே
பகிர்கிறோம்...

என் அழகான சண்டைக்காரி நீ...
உன்னிடம் மட்டும் அடிக்கடி தோற்கிறேன்...

நாம் நமக்காய் உருவாக்கிக் கொண்ட
நமக்கான உலகத்தில் சந்திக்கிறோம்...
நம் வார்த்தைகளை நட்டு
வளர்த்து விட்ட ஒரு செடி,
உணர்வுகளை பூவென செய்துக் கொண்டிருக்கிறது...

பின் ஒரு நாளில், உனக்கான உலகித்தில்
இந்த செடியை நீ நினைத்திருப்பாய்...
அப்போதும், உணர்வுகளின் சருகுகளோடு
என் தனிமையில் நான் இருப்பேன்...
எல்லா பரபரப்பிலும்,
அமைதியாய் எனக்குள்ளே நீ எப்போதும்
புன்னகைத்தபடி பார்த்திருப்பாய்..

என் அழகான சண்டைக்காரி நீ...

மிஸ்பாஹுல்ஹக்



எலிகள் ஆழும் ஒரு தேசம்



எலிகள் ஆழும் ஒரு தேசத்தில்
ஒரு கருஞ்சாரை  குடிகொண்டது...
அதன்  கனவுகளில்
சில தேரைகளும் தவளைகளும்
உணர்ச்சிமூட்டி போயின...

சர்பதோஷம் நீங்கிய
எலிகளின்  புணர்ச்சியில்
உணர்ச்சியிழந்து பிறந்த
அந்த கருஞ்சாரை
ஒரு தவளையின்  பால் அருந்தி
விரகதாபம் பூண்டது....

எலிகளின் பிணம்
உண்டு வாழும் அந்த பாம்பு
எலிகளின்  கல்லறைகளில்
தனிமை பட்டு போனது....

இங்கே, அதன் விஷம்
அதற்கே புகட்டப்பட்டுக் கொண்டிருந்தது....



#மிஸ்பாஹுல் ஹக்

Tuesday, 2 February 2016

தேநீர் கோப்பை




என் இதயத்தைப் போலவே 
வெறுமையாய் கிடந்த இந்த
தேநீர் கோப்பையை
வெறித்துப் பார்த்துக் கிடந்தது என் நினைவுகள்....

உதடுகள் வெடிக்க
விறைத்துக் கொல்லும் இந்த குளிரின்
மெல்லிய விரகத்தை போக்கிக்கொண்டிருந்து
சற்று முன்னர் வரை இந்த தேநீர்....
அவள் மூர்ச்சை தரும் அணைப்பைப்போல்...

ஒரு வக்ர ராகமாய் மாறிவிட்டிருந்த
உன் புன்னகையின் நினைவுகள்
எனக்குள்ளே பேரிரைச்சலாய் கரித்துக் கொண்டிருந்தது...
உள்ளே இழுத்துவிட்டிருந்த
அபினியின் கிளுக்கிளுப்பை கூட்டிவிட்டிருந்தது....

நீண்டு வளைந்த இந்த
சாலையைப் போல தனித்திருந்தது இந்த பஞ்சமம்...
எப்போதோ நீ இசைத்துப் போயிருந்தாய்...

மிஸ்பாஹுல்ஹக்.


02nd February 2016