Sunday, 29 January 2017

நட்சத்திரங்கள் சிதறிய நேற்றைய இரவு



நட்சத்திரங்கள் சிதறிய
நேற்றைய இரவில்
நீண்டுக் கிடந்த பாதையின் வழியே
இறுகப்பற்றி நடந்தன நம் ஆன்மாக்கள்.
உன் கண்ணீரில் வழிந்துக் கொண்டிருந்த வலியை
என் வார்த்தைகள் சுமந்துக் கொண்டிருந்தன.
என் வார்த்தைகளில் எஞ்சிக்கிடந்த தனிமைகளை
உன் புன்னகை நிரப்பிக்கொண்டிருந்தது...
‘‘பரவசம் தருகிற ஸ்பரிசங்கள்’’
நம் வானங்களில் மிதந்த இறகுகள் அவை...
மௌனங்களுக்குள் மறைந்துக் கிடந்த
நேசத்தின் வருடல் அவை...
‘’நாம் மிக தொலைவில் இருக்கிறோம்’
நம் வாசனைகள் மிக அருகில் இருக்கின்றன...
இது அவர்கள் இல்லாத ஒரு உலகம்.
விம்பங்களால் செதுக்கிய ஆன்மாக்கள்
சந்திக்கும் ஒரு கனவு வெளி,
கவலைகள் இல்லாத ஏகாந்தம்.
‘’நான் எனும் காட்டை மெல்ல திறக்கும் தாழ் நீ’’



Wednesday, 25 January 2017

அழகான திமிர் உனது

உன்னை போலவே
உன் திமிரும் மிக அழகானது
யஷோதரா.

உன் அழகை, 
ரம்மியமாய் மாற்றும்
குங்குமப் பொட்டை போல
உன் நெற்றியில் ஒரு முத்தத்தால்
உன்னில் படிந்து விடுகிறேன்...

யுகங்களின் தவங்களை
கலைத்துவிடும்
உன் தெளிந்த கண்களும் அதன் திமிரும்
என்னை உன்னில் சிறை வைத்திருக்கிறது...

அழகான திமிர் பிடித்தவளை
எனக்குள்ளே கொண்டாடுகிறேன்...
உன் காதலெனும் காற்றில்
ஒரு இறகாய் மிதக்கிறேன் என் யஷோதரா...



Thursday, 12 January 2017

அன்பின்_எழுத்து

ஒரு யுகம் தாண்டிய
கவிதைக்கான எழுத்துக்களை
சேகரித்து கொண்டிருக்கிறான் அவன்.

ஒவ்வொரு எழுத்துக்களும்
அவனால் நிர்வாணப் படுத்தப்படுகிறது,
இப்போது அவை,
அடாயளங்களும் மதங்களும் இன்றி
வெறும் எழுத்துக்களாகவே
தனித்து நிற்கின்றன...

ஆடைகளால் அடையாளம் கொடுக்கப்பட்ட
பாலினம் இன்றி சுதந்திரமாக சுத்தமாக
கிடந்தன அவைகள்...

நானும், அவனும்
ஒவ்வொரு எழுத்துக்களாய் சுமந்து
கண்ணீரின் முடிவுகளில்
தொடங்கிய ஒரு நதியில்
அவைகளை கழுவி நிறங்களை
போக்கிக் கொண்டிருக்கிறோம்...

பேதங்கள் களைந்த எழுத்துக்களை
முத்துக்களை போல
சேகரித்துக் கொண்டிருக்கிறோம்..

அந்த முத்துக்களின் மீது,
அன்பையும், நேசத்தையும், காதலையும்
செதுக்கி எனக்குள் பதித்து விடுகிறான்
அவன்.

இப்போது அன்பின் யுகத்தை தேடி
என்னை நான் கடந்துக் கொண்டிருக்கிறேன்.

Wednesday, 4 January 2017

அவன்_எனும்_கவிதை.




காதல் நீர்த்த சதைகளின் மீதான
காமத்தை பற்றி அந்த இரவில் அவன்
பேசிக்கொண்டே இருந்தான்...

மேகங்கள் நட்சத்திரங்களை மறைத்து வைத்த
பிணிகொண்டு நீளும் யாமமது...

என் பருத்து செழித்த முலைகளின் மீதும்,
ஒரு யுகத்தின் தாகம் தீர்க்கும் இதழ்களின் மீதும்
படியாத பார்வை....
உன்மத்தமான வெறுமைக்குள் படர்ந்திருந்த
ஆன்மாவை, கண்களினூடே
கரைத்துக் கொண்டிருந்தது....

முல்லை கங்குலென இருண்டு கிடக்கும்
மனமெங்கும், படர்ந்து பறக்கும்
மின்மினிகளை போல
ஒரு ரம்மியமான காதல் அவன் மீது
ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது....

நிலவில் இருந்து வந்தவன் அவன்...
செட்னாவிலிருந்து கனவுகளில் வந்தவள் நான்..

ஒரு பெண்ணின் ஆன்மாவை
ஸ்பரிசிக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.

அவன் பார்வையும், வார்த்தையும்
மாயைகளில் வார்க்கப்பட்டவை

நீண்ட பெரும் கதைகளில் என்னை
சிறை வைத்திருக்கிறான்....

இது அவன் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை...
அவன் எனும் ஏகாந்தத்தில் இருந்து
விழுந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள்...
இப்போது என் வாசிப்பின் பிரங்ஞையை முடித்துக்கொண்டு
காதல் எனும் வெறுமையில் வழிந்துக் கொண்டிருக்கிறேன்...

#மிஸ்பாஹுல்ஹக்.