Wednesday, 19 October 2016

ஷெனாயில் மிதக்கும் உலகம்...

பின்னிரவொன்றில் விழித்துக்கொண்ட
இரு விழிகள்...
இன்னும் உறங்க மறுத்து,
சிவந்து கனன்று எரிந்துக் கொண்டே இருக்கிறது...

அவன் காதுகளில் மெதுவாய் கதைபேச,
விரகம் படிந்த இரவுகளில்
நிர்வாணமாய் திரியும்
ஒரு காற்றை அவன் அறைக்குள் நுழைத்து விடுகிறேன்...

அந்த தனிமை,
கனன்று எரியும் இந்த விழிகளின் ஒரம்..
ஒரு புழுவைப்போல் நெளிந்து வழியும்
கண்ணீரால்,
வறண்டு வெடித்த இவன் உதடுகளை
மெதுவாய் வருடக்கூடும்,

அபினி தரும் பிம்பங்களின் கிறக்கம் மட்டும்,
ஒரு கனவுலகத்தை
இவன் கண்களுக்குள் இழுத்து வருகிறது...
ஷெனாயில் மிதக்கும்,
கருப்பு தேவதைகள் நடனமிடும் கனவுலகது...

வர்ணங்களை தொலைத்த
ஓவியங்களால் அலங்கரித்து செய்த
அந்த உலகில்
தனிமைகளில் கதை பேசும் காற்றுக்கு,
தேவதையாய் உருவம் தீட்டபடுகிறது...

இப்போது, என் கண்களை
இறுகமூடிக் கொள்கிறேன்,
கண்ணீரோடு வழிந்துக் கொண்டிருக்கிறது,
இருண்டு மறைந்த அந்த கனவின் உலகம்...

#மிஸ்பாஹுல்ஹக்