Wednesday, 28 June 2017

"ஏன் காதலை மட்டுமே பாடுகிறாய்?"

பெரும் கடலை
துளித்துளியாய் பருக முனைதலைப் போல
உனக்கான காதலை சொல்ல
என் வார்த்தைகள் திணறிக்கிடக்கின்றன
யஷோதரா...
வாசியடையும் ஒவ்வொரு சுவாசமும்
காதலின் சூட்சுமக் கணக்கில்
ஒரு பிரபஞ்ச ரகஸியத்தை எழுதி வைக்கிறது..
"ஏன் காதலை மட்டுமே பாடுகிறாய்?"
அதைத்தவிர இங்கே ஏதும் பாடக்கிடக்கிறதா..?
மூன்றாம் கண் தெளிந்த ஆன்மாக்கள்
காதலைத் தவிர எதைக்காணும்...
அகோசரங்களின் வாயில்களை
தேடியலையும் அந்தணர்களின்
நதி காதல் என்பது உனக்கு தெரியுமா
யஷோதரா...
என்னில் மறைத்துக் கொண்ட
மூல வேர்களில் உன் பெயரை எழுதிவைத்திருக்கிறேன்....
ஜீவசக்தியாய் என்னில் பரவும் சுவாசம் முழுதும் உன்னை நிரப்பிவிடுகிறேன்...
நான் என்கிற என் சூட்சும சூத்திரங்களை
நீயாக திரித்திருகிறேன்...
இப்போது இருள் மறைத்த ஒரு பெருவளியில்
நம் காதல் மட்டுமே என் ஒற்றை உணர்வாய்
என்னை வழிநடத்திப் போகின்றது...
எனக்கு உன் காதலைத் தவிர எதுவும் தெரியாது.

Tuesday, 20 June 2017

இவனின் புன்னகை...

பிரபஞ்ச இரவில் படர்ந்த
ஒரு சுடரின் கதகதப்பை
அறைக்குள் இழுத்து வருகிறான்
வழிப்போக்கன்...
இனி இருளின்
மருளகன்ற பெருவெளியில்
ஒரு இறகைபோல மிதந்து கிடக்கும்
இவனின் புன்னகை...