Monday, 24 April 2017

யாமினி!!!

யுகாதிவரை நீளும்
உன் அந்தகார இருளுக்குள்,
இன்னும் எத்துனை ரகஸ்யங்களை
பொதித்து வைத்திருக்கிறாய் யாமினி...
தனிமையை விட்டு வெளியேறிவிடுகின்ற
நேசங்களை சில கனவுகளைக் ஏவி
இறத்தலுக்கும் இருப்புக்குமிடையில் வதைக்கிறாய்...
"ஒற்றை கணத்தில் எத்தனை மரணத்தை
கடக்கிறது இந்த ஆன்மா"
சிவப்பு நிறத்தில் சில வார்த்தைகளை
இப்போது திரித்துக் கொண்டிருக்கிறேன்...
இந்த யாமம் தீருமுன் மௌனத்தை
தூக்கிலிட்டு விடுவேன்...
யாமினி!!!
உன் விசும்பலின் தொலைவில்
செத்துக் கிடக்கிறது இந்த அலத்தி...
அதன் கனவுகள் கருப்பாய்
எனக்குள் வழிந்துக் கொண்டிருக்கிறது...

Sunday, 23 April 2017

என்னில் ஜீவனாய் வழியும் ஆபகை நீ..

அரிதம் படர்ந்த தனிமையொன்றில்
ஆவி நீர்த்த பிண்டமாய் கிடந்திருந்தேன்...
அறுதிசையற்ற பெருவெளி,
சூன்யங்களில் சிக்கிய கனவு
கண்களில் அடங்கிய பெரும் நிசப்தம்...
அல்லியனை போல நான்
மீண்டும் தனிமை மிகைத்த ஆரணியத்தில் கிடந்தேன்...
காதல் எனும் தாழ்திறந்து
மெல்ல என்னுள் கசிந்துக் கொண்டிருக்கிறாய் யஷோதரா!!
இந்த வெறுமையை
உன்னத காதலால் நிரப்பிவிடுகிறாய் நீ...
அடல் கடந்துவிட்ட என் அங்கிதங்களின் மேல்
அங்கையின் ஸ்பரிசத்தில் மாயம் செய்கிறாய்...
“யுகங்களை கடந்துவிடுகின்ற
ஒரு முத்தம் வேண்டும்”
மெய்தழுவி ஒரு நீண்ட பெரும் முத்தம்...
யாமங்களில் குவியும் நிஷ்டையை போல
போதை மிகுந்த ஒரு முத்தம் வேண்டும்...
முத்தங்கள் கடத்தும் ஜீவனின் சூட்சுமம்
இரவின் கடலை போல மிக்க ரகசியமானது யஷோதரா...
அந்த கடலின் ஆராவம்
நம் கனவுகளுக்குள் ஒரு விசும்பலை போல படர்கிறது
கேட்கிறாயா..!!!
என்னில் ஜீவனாய் வழியும்
ஆபகை நீ..
இருள் படர்ந்த இந்த அனங்கமெங்கும்
உன் புன்னகை நட்சத்திரங்களை செய்துகொண்டிருக்கிறது..
எங்கிருந்தாய் என் கண்மணியே...

Thursday, 6 April 2017

எனக்கு பனித்துளிகள் வேண்டும்.

என்னை தழுவி,ஸ்பரிசித்து ஆசுவாசப்படுத்தும்
ஒரு காற்றை தோழமை கொண்டிருக்கிறேன்...
எப்போதும் என் எல்லா உணர்வுகளையும் அந்த காற்றோடு மட்டுமே என்னால் சொல்லிக்கொள்ள முடிகிறது...
இரவுகள் தீரும் வரை அந்த காற்று சொல்லும் கதைகள் மெல்லிய விசும்பல்களாய்
என் உணர்வுகளுக்குள் விரவி நிற்கும்....
விரல்களில் அப்பிக்கொள்ளும் காய்ந்த என் கண்ணீரின் வாசனையை மெல்லிய தீண்டலில் கண்ணீரை காயவைக்கும் மாயம் கொண்ட அந்த கற்றிடம் நான் உணர்கிறேன்,
இந்த கங்குலின் கருமைக்கும் எனக்கும் என்ன உறவோ அதே உறவு தான் அந்த கற்றுக்கும் விடியலுக்குமானது, ஒவ்வொரு விடியல்களிலும் பூக்களின் இதழ் கழுவும் பனித்துளிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை பற்றியும் எங்கே அவை போகின்றன என்பதை பற்றியும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
பூவிதழ் போல மெல்லிய இதயம் ஒன்று இருக்கிறது.
எனக்கு பனித்துளிகள் வேண்டும்.