Thursday, 2 February 2017

‘’நான் ஒரு புல்லாங்குழல் ♪ ’’



உன்மத்தமான ஒரு கவிதை என்னுள் மெதுவாய் வழிகிறது....
அந்த கவிதையில் கரைந்து மெல்ல மறைகிறேன் நான்...♪
‘அற்புதமான ஒரு கவிதையை நேசிக்கிறேன்”
அந்த கவிதை என்னை நேசிக்கும் போது நான் அற்புதமாகிறேன்....
உன்னதமான காதலில் நாங்கள் அற்புதமாகிறோம்.

‘இரட்டையர்களை போல நாங்கள்’
ஒற்றை ஆன்மா இரு ஸ்தூலங்களில் ஊதப்பட்டிருக்கலாம்
இந்த இடைவெளியும் மெல்லிய கனமாய், பெரும் ரணமாய் நமக்குள்ளே கரித்துக் கொல்கிறதே கண்ணே!
பெரும் காதல் தகத்தின் வரம் நீ, வாழ்வின் சரம் நீ,
ஒவ்வொரு விடியலிலும் என்னை பரவசமூட்டும் பறவைகளின் இசை நீ...
வா இந்த உன்னதத்தை கொண்டாடலாம் யஷோதரா♪, நமக்கான காதல் வானம் எல்லையற்றது...
நம் அன்பின் சிறகுகளை நாம் எப்படியும் இந்த வானமெங்கும் விரிக்கலாம் கண்ணம்மா...
‘’நான் ஒரு புல்லாங்குழல் ♪ ’’
பெரும் ரணங்களில் மீண்ட மூங்கில், உன்னால் மாட்டுமே இசைக்க முடிந்த புல்லாங்குழல்.
என்னை இசைத்துக்கொண்டே என் இருப்பில் நீளும் கவிதை நீ...
இந்த அண்டம் அசையும் மறைந்த இசையொன்றை என்னில் எழுப்பிக்கொண்டே இருக்கிறாய் யஷோதரா, காதலை மெல்ல வளர்க்கும் இரவின் இசையது...
இந்த இரவுகளையும் பகல்களையும் குதூகலமாய் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்...
நீ என்னையும் நான் உன்னையும் உடுத்தியிருக்கிறோம்....
நான் எனும் குளத்தை நிரப்பும் பெரும் மழை நீ, ஓயாமல் அன்பை பொழிகிறாய். பொழிந்துக் கொண்டேயிருக்கிறாய்....
காதலெனும் காட்டோடு என்னை எரித்து விடுகிறாய்...
“நிறத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கை போலத்தான் நீயும், நிறம் இழந்ததாய் எதையேனும் கண்டிருந்தால் எனக்குச் சொல்லி விடு ♪♪
சுவாசத்தின் இருப்பிடங்கள் நீயும் நானும் சந்திக்கும் புள்ளியில் சேரும் போது இருப்புக்களை புதுப்பிப்போம்
உன் சுவாசங்களின் சூட்டில் ஒரு உலை கொதிக்கும் சுகம் காணும் பொழுதுகளிலும் அந்திகளிலும் கொடி போல உன்னில் படர்ந்திருப்பேன்”
இப்படித்தான் என் காதில் மெல்ல நீ விசும்பிக் கொண்டிருக்கிறாய்.....
ஒரு இருள் படர்ந்த, இருப்புக்கள் அற்ற சூனிய வெளியில் உன் ஒற்றை குரலில் வாழ்கிறேன்...
உன் குரலை தவிர இங்கே எதுவும் இல்லை, உன் குரல் மட்டுமே நிலைத்திருக்கிறது...
உன் குரல் அங்கே எனக்குள் ஒலிக்கிறதா, இல்லை நான் உன்குரலில் கரைந்துக் கிடக்கிறேனா....
புரியாத மயக்கத்தில் சிதைந்து கிடக்கிறேன்....
தீயாய் எரிகிறாய் நீ....
அதில் விறகாய் கருகுகிறேன் நான்...
விறகில் எழுந்ததா இந்த தீ... இல்லை தீயால் கருகியதா விறகு...
இரண்டின் முடிவிலும் இரண்டும் இருக்க போவதில்லை...
அதுவே நம் உன்னத காதல் கண்மணி...♪♪♪


No comments:

Post a Comment