என் கண்களும்
நரம்புகளும் புடைக்க,
என் கால்கள்
துடிக்க,
உன் கைகளாலோ,
இல்லை ஒரு கையிற்றாலோ
கழுத்தை நெரித்து
இறுக்கி,
நீ என்னை
கொன்றிருக்கலாம்.
என் குரல்வளையை
அறுத்தோ,
என் மார்பிலும்,
வயிற்றிலும்,
இன்னும்
கிடைக்கின்ற எல்லா உறுப்புகளிலும்
உன் வார்த்தைகளை
விடக் கூர்மையான ஒன்றால்
சாகும் வரை
குத்தி குதறியிருக்கலாம்.
என் நரம்புகளும்,
கலங்களும்
இறுக்கிப்பிடித்து,
உடல் முழுதுமாய்
துடித்து,
வாயில் நுரைத்தள்ளி
சாக
எனக்குள் நீ
நஞ்சூட்டியிருக்காலம்.....
என் பின்னந்தலையும்
மூளையும் சிதற,
என் நெற்றிப்
பொட்டில்
நீ அழுத்தும்
துப்பாக்கி ரவையால்,
விசுக்கென பரவும்
ஒரு நொடி வலியில்,
என் அமைதியை நீ பார்த்திருக்கலாம்...
என் மனதைவிட கனமானவொன்றால்
என்
மூட்டுக்களும், எலும்புகளும்
மண்டையோடும்,
உடைந்து,
சிதைந்து நான் மாண்டு போகும் வரை,
மெல்லிய
ஸ்பரிசங்கள் படர்ந்த
உன் கைகளால்
கொன்றிருக்கலாம்...
என் கைகளை பின்னே
இறுகக்கட்டி,
என் ஓலம்
கேட்காதபடி என் வாய்க்குள்
உன் மௌனங்களை
திணித்து,
என் உடல்
துண்டாகி சிதறும்வன்னம்
தண்டவாளமொன்றில் கிடத்தி வைத்திருக்கலாம்....
இல்லை,
பொசுக்கென
பற்றிக்கொள்ளும்
என் கோபத்தைப்போல
ஏதோவொன்றை
என்மீது உற்றி, என்னை எரித்துவிட்டிருக்காலாம்.
என் கொடுரமான
மௌனங்கள் செய்யும்
மாய வதைக்காக
நீ என்னை
எப்படியோ கொன்று,
பழிதீர்த்துக்
கொள்...
என் வார்த்தைகளை
மீள முடியாத
ஏகாந்தமொன்றில் புதைத்துக்கொண்டிருக்கிறேன்.
#மிஸ்பாஹுல்ஹக்

No comments:
Post a Comment