Sunday, 6 November 2016

எதிலிருந்து நான் விழித்தேன்...

திடுகிட்டு விழித்துப்பார்த்த போது,
அவள் வார்த்தைகள்
சிதறிக் கிடந்த ஒரு வெளியில்
என் கனவுகள் தனித்து நின்றன....

எதிலிருந்து நான் விழித்தேன்...
நான் உறங்கியாதாய் எனக்கு ஞாபகம் இல்லை...
நான் விழித்துக் கிடந்ததாயும் எனக்கு ஞாபகம் இல்லை...
எதிலிருந்து நான் விழித்தேன்...

சிதறிக் கிடக்கிற
அவள் வார்த்தைகள் பொறுக்கி,
என் எழுத்துக்களில் பொருத்திக் கொள்கிறேன்...
செத்துக் கிடந்த என் எழுத்துக்கள்
இப்போது மெல்ல உயிர்பெற்று எழுகிறது....

ஒரு அண்டம் போல கனத்துக் கிடக்கிறது
அவளின் வார்த்தைகள்...
பெரும் காதல் கொண்ட இதயம்
ஒரு பேரின்பமாய் அதை தாங்கிக் கொள்ள கூடும்...
இங்கே எல்லாவற்றின் இரகசியமும்
தீராத ஒரு காதல் தானே...

உண்மையில் எதிலிருந்து நான் விழித்தேன்...
இந்த மாயக் கேள்வி
என் கனவுகளை இரவில் இருந்து இழுத்து
தனிமைகளால் சித்ரவதை செய்கிறது...

வெண்மை மட்டுமே படர்ந்த
ஒரு தனித்த உலகில்....
அவள் வார்த்தைகள் கொண்டு
உன்னதமான என் காதலை செதுக்கிக் கொண்டிருக்கிறேன்....
அது மெல்லிய ‘ஆபேரி’யாக ஒலித்துகொண்டே இருக்கிறது...



No comments:

Post a Comment