Friday, 18 November 2016

கவிதைகள் விற்பவன்.



கவலைகள் சுமந்து., கனவுகள் சுமந்து....
கனத்த நினைவுகளை சுமந்து....
கடன்களை சுமந்து, கடமைகளை சுமந்து....
வலிகளை சுமந்து, பலிகளை சுமந்து
காதலை சுமந்து,  தீராத ஆசைகள் சுமந்து....
நிமிடங்கள் தோறும்
ஆயிரமாயிரம் முகங்கள் அவனைக் கடந்து
போகிறது....

வேகமாய் அவனை கடந்து போகிற
விந்தையான ஒவ்வொரு முகமும்
புத்தகங்களின் பக்கங்களைப்  போல....
மெதுவாய் அவன் புரட்டிக்கொண்டிருக்கிறான்
கருப்பு வெள்ளை எழுத்துக்கள்
இன்னொரு உலகத்தை திறந்து விடுவதைப்போல
ஒவ்வொரு முகமும் அவன் கவிதைகளை செய்துகொண்டிருந்தது....


யாரோ மிச்சம் வைத்து போடுகின்ற உணவு
அவன் வயிற்றை நிரப்பி விடுகிறது....
அவமானங்களை அணிந்துக்கொண்டவனை
நிர்வாணம் அலங்கரிகிறது....
பேரிரைச்சல் தரும் இந்த சாலைகள்
அதில் கனவுகள் அமர்ந்து செல்லும் வாகனங்கள்....
மனித விலங்குகளின் ஆரவாரங்கள்
அவன் தவத்தை கலைத்திருக்கவில்லை....
இந்த சாலையோரம் அவனுக்கு உறக்கம் கொடுத்தது....
தேவைகள் அற்றவனிடம் நிம்மதி இருக்கும் என்பது
அவனை போன்றவர்கள் அறிந்து வைத்திருந்த ஞானம்,

தனிமைப்படுத்திக் கொள்ள
காடோ, கற்குகையோ, மலைகளோ
தேவையில்லை.....
சாலையோரங்களில் அவனைப் போன்றவர்களை
இந்த மனிதர்களே தனிமைப்படுத்தி விடுகிறார்கள்...


அழுக்கு படிந்து நாற்றம் வீசும் குமட்டும்  அவன் மேனி
இந்த வாழ்க்கையின் குறியீடு.
அடிப்படையில் மனிதன் அசுத்தமானவன் என்பதையும்
அழுகிபோகும் பலவீனம் என்பதையும்
அவனைக் கடக்கும் அந்த முகங்களுக்கு
அவன் உணர்த்திக்கொண்டே இருக்கிறான்....


அவன் இடுப்பைச் சுற்றி, சொருகி கிடக்கும்
பைகளில், மெத்த கனவுகள் கிடந்தன....
அது எப்போது யாரால் கண்டவைகள் என
அவனுக்கு தெரியாது....
அந்த கனவுகளின் விசும்பல்கள் மட்டும்
அவனுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கிறது....

கவலைகள் சுமந்து, கனவுகள் சுமந்து....
கனத்த நினைவுகளை சுமந்து....
காதலை சுமந்து, நிமிடங்கள் தோறும்
ஆயிரமாயிரம் முகங்கள் அவனைக் கடந்து
போகிறது....
அவனோ அந்த முகங்களில் இருந்து வழியும்
கவிதைகள் சேகரிக்கிறான்....

அதோ அந்த பைத்தியம்,
அவன் நிம்மதியாய் உறங்கிக் கிடக்கிறான்
அந்த சாலையோரம்....

#மிஸ்பாஹுல்ஹக்.











No comments:

Post a Comment